அஸ்வினிமுத்திரை

Posted on

அஸ்வினி முத்திரை

அழகைப் பாதுகாப்பது எப்படி?
எந்நேரமும் சந்தோஷமாய் இருப்பதெப்படி?
இனிய இல்லறத்திற்குப் பத்து யோசனைகள்!
நரைமுடி கருமுடியாய்த் தழைக்க!
இதுபோன்ற தலைப்புகளைப் பார்த்தால் உடனே ‘கிளிக்’கி விடுவோம். “இளமையின் ரகசியம்” என்றால் மட்டும் விட்டுவிடுவோமா? உள்ளே வந்ததற்கு நன்றி. மேலும் படியுங்கள்.
பல்வேறு புத்தகங்களைப் படித்திருப்பீர்கள். பல்வேறு ஆலோசனைகளைக் கேட்டிருப்பீர்கள். பார்த்துப் பார்த்து, படித்துப் படித்து, கேட்டுக் கேட்டு எதிலேயும் திருப்தி அடையாமல், எல்லாம் ‘டுபாக்கூர்’, எந்த முறையிலும் இளமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். உங்கள் முடிவுக்கு ஒரு முடிவு கட்டி இதை ஆரம்பியுங்கள்.
ஓர் எளிய உடற்பயிற்சிமுறை. வியர்க்க விறுவிறுக்கச் செய்ய வேண்டியதில்லை. இதற்கென தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. அட..அப்படி ஒரு பயிற்சி முறையா, என ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம். உண்மைதான். முறையாகச் செய்தால் சிறந்த பலன் கிடைப்பதைக் காண்பீர்கள்.அட ஒண்ணுமில்லீங்ணா. குதிரை பாத்திருப்பீங்க. அதோட கம்பீரத்தை ரசிச்சிருப்பீங்க. அது கொள்ளு தின்னும் அழகைப் பருகியிருப்பீங்க. அதன் தோலோட வழவழப்பு, உறுதியைக் கண்டு வியந்திருப்பீங்க. என்னிக்காவது இதன் உடம்புல மட்டும் எப்படி இவ்வளவு பலம் வந்துச்சு, எப்படி இவ்வளவு கம்பீரமாத் தெரியுது அப்படினு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்களா?இரண்டே இரண்டு விஷயங்கள் தான். முதலில், அது தின்கிற கொள்ளு. கொள்ளு சாப்பிட்டால் கிடைக்கும் பலன் என்னவென்றால், உடம்புல இருக்கிற அனாவசிய கொழுப்புகளையெல்லாம் கரைத்துக் காலாவதி ஆக்கிடும். இது முதல் விஷயம்.

இரண்டாவது, அதன் பின்புறப் பகுதி. மலஜலம் கழிக்கும் பகுதி. அங்கே தான் சூட்சுமமே இருக்கு. உடம்புல சகல பாகங்களிலிருந்தும் செல்லும் முக்கிய நரம்புகள் அந்த இடத்தில் தான் முடிச்சுகளாய்ப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. வீணையில் எவ்வளவுக்கெவ்வளவு நரம்புகள் தொய்வடையாமல் உறுதியாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அது எழுப்பும் நாதம் இனிமையாக இருக்கும்.

அது போலவே இந்த நரம்புகளின் உறுதிதான், மனிதனோ விலங்குகளோ, அவற்றின் இளமையையும் பலத்தையும் நிர்ணயம்
செய்கின்றன. நரம்புகள் கட்டுறுதி குலைந்துவிட்டால் அவ்வளவுதான். உடல் நைந்துவிடும். அழகிழந்து விடும். அதனால் இந்த நரம்புகளைப் பேணிக் காப்பது அவசியம். வீணையென்றால் திருகாணியை முறுக்கிவிட்டால் போதும். நரம்புகள் முறுக்கேறி விடும். குதிரை என்ன செய்யும்?

இப்போதுதான் விஷயத்திற்கு வந்திருக்கிறோம். குதிரையின் பின்பக்கத்தைக் கவனியுங்கள். சுருங்குகிறது… விரிவடைகிறது… சுருங்குகிறது… விரிவடைகிறது… மறுபடி… மறுபடி. அது இப்படிச் செய்யாத நாளே இல்லை. இதனால் நரம்பு முடிச்சுக்கள் தூண்டப்பட்டு நரம்பு மண்டலத்தினூடே மின்சாரம் பாய்கிறது. சக்தி உருவாகிறது. இளமை சக்தி.

இது ஒரு அருமையான காயகற்பக் கலை. குதிரையைப் போல நாமும் செய்யவேண்டும். அவ்வளவுதான். இதை யோக மகரிஷிகள் ‘அஸ்வினி முத்திரை’ என்கிறார்கள். சிறு சிறு எளிய ஆசனங்களை உள்ளடக்கி, அதனுடன் இந்த அஸ்வினி முத்திரையும் செய்தால், உடலில் ஒருவித மின்சாரம் பாய்வதை உணரலாம். இதை நன்குணர்ந்த மறைந்த தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் தம் அனுபவத்தின் வாயிலாக இந்த அரிய கலையைப் பயிற்றுவித்தார்.

இதன் பலனை நீங்கள் ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே உணரலாம். தினமும் மிகச் சரியாக கடைப்பிடித்து வந்தீர்களேயானால் ஒரே மாதத்தில் உங்களிடத்தில் மிகப்பெரும் மாற்றத்தைக் காண முடியும்.

இக்காயகற்பக்கலை வேதாத்திரி அவர்களின் மனவளக்கலை மன்றம் மூலம் நடத்தப்படுகிறது. இக்கலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்களைத் தவிர, வேறு யாருக்கும் இதனைக் கற்றுத் தர அதிகாரமில்லை. அதனால் இப்பயிற்சி முறையை இங்கே விரிவாக விளக்க முடியாது. இது ஒரு அறிமுகம் மட்டுமே. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள மனவளக் கலை மன்றம் மூலமாகக் கற்றுக் கொள்ளலாம்.

அருட்தந்தை வேதாத்திரி அவர்களது கவி ஒன்று இங்கே:

காயகற்ப யோகமென்னும் உயர்சஞ் சீவி
கருத்துடனே செய்துவந்தால் வித்து கட்டும்.
தூயமுறை நரம்பூக்கம், ஓஜஸ் மூச்சு
தொடர்ந்திரண்டும் குருவழியே செய்யச் செய்ய,
போயபிழை கள்போகும்; பிணிகள் நீங்கும்.
புத்துணர்வும், இறையருளும் ஊற்றெ டுக்கும்.
மாயமென வித்தமுத ரசமாய் மாறி
மரணமிலாப் பெருவாழ்வு சித்தி யாகும்.

இங்கே அழுத்துங்கள் https://paramarakasiyam.wordpress.com/2011/06/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/

Leave a comment